ஈடில்லா இயற்கை வேளாண்மை
பாட்டன், பூட்டன், அப்பன், ஆத்தா ஆண்டாண்டு காலமாய் செய்திட்ட வேளாண்மை..
மனையெல்லாம் உணவு, தானியங்களாய், அகமும் புறமும் நிறைந்திட்ட வேளாண்மை..
சூழலை ஒரு கூறாய் அதில் தான் ஒரு பகுதியாய் காற்றும் ஒளியும் மட்டுமே அயற்பொருளாய்ப் பெற்ற வேளாண்மை..
விதைகளையும் விளைவிக்கும் வித்தைகளையும் தன்னுள்ளே கொண்டு தங்களுக்குள் வேலைகளை குறிகாப்பாய் விற்பனையை பண்டமாற்றாய் வாழ்ந்திட்ட வேளாண்மை..
சீர்தானியங்களை பேரளவில் விளைவித்து மானுட நலன் மட்டுமின்றி நீரையும் நிலத்தையும் சுரண்டாமல் வாழ்ந்திட்ட வேளாண்மை..
வாய்க்காலில் வரும் நீரைப் பருகி, அடிபட்ட காயத்துக்கு மண்ணையே மருந்தாக்கி, விளையாட்டாக மண்ணைக் கூட வாயில் இடும் நற்சூழல் கொண்ட வேளாண்மை..
அது இயற்கை முறை வேளாண்மை…
திட்டமிட்டு அழிக்கப்பட்ட இந்த வாழ்வியல் முறையை மீட்டெடுக்க வந்த பேராசான் நம்மாழ்வார் வழி நடப்போம். நம் எதிர்காலத் தலைமுறையிடம் கடன் பெற்ற இப்புவியை சூழல் மாறாமல் அவர்களிடம் கையளிப்போம்…